பதிவு செய்த நாள்
03
செப்
2014
11:09
புதுச்சேரி: புதுச்சேரி மாநில இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், கடந்த 29ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாரம் அவ்வை திடலில் 25 அடி உயர கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் 2.00 மணியளவில், சாரம் அவ்வை திடலிலிருந்து கணபதி சிலை மற்றும் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப் பட்ட விநாயகர் சிலைகள், விஜர்சனம் செய்வதற்காக கடற்கரைக்கு மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. காந்தி திடலில் நடந்த விழாவில், தமிழக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், இந்து முன்னணி பொதுச்செயலாளர் சனில்குமார், பா.ஜ., மாநில தலைவர் விஸ்வேஸ்வரன், பொதுச் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வழக்கமாக, பழைய துறைமுகத்தின் மேல் பகுதியிலிருந்து விநாயகர் சிலைகளை கடலில் இறக்கி விடுவர். இந்தாண்டு, துறைமுக நிர்வாகம் திடீரென்று அனுமதி மறுத்து விட்டதால், விநாயகர் சதுர்த்தி விழா பேரவையினர், ரூ.60 ஆயிரம் செலவில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்ட ராட்சத கிரேன் மூலம், விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தது குறிப்பிடத்தக்கது.