அவலூர்பேட்டை: கடலி கிராமத்தில் விழும் நிலையில் உள்ள கல் மண்டபத்தை சீரமைத்து, வரலாற்று குறிப்பு பலகை அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் கடலி கிராமத்தில் நீலாம்பூண்டியிலிருந்து மேல்மண்ணூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் குளக்கரை பகுதி அருகில் ராஜாதேசிங்கிற்கும் ஆற்காட்டு நவாப்பிற்கும் போர் நடந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடத்திற்கு செல்ல வசதியாக இருந்த வழிகாட்டி பலகை சில ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்தது. குளக்கரை பகுதியிலும் வரலாற்று குறிப்புகளுடன் விளக்கு போர்டு அமைக்கவில்லை. ராஜா தேசிங்கு மரணமடைந்த இடத்தில் மட்டும் சிறு சுவர்களை அமைத்து, விவர குறிப்புகளை எழுதியுள்ளனர். குளக்கரை அருகே வேலைப்பாடுடன் 16 கால், கல் மண்டபம் பாழடைந்து விழும் நிலையில் உள்ளது. மண்டபத்தின் மேல் புறத்தில் அரச மரம், வேப்ப மரம், முள்வேலி உள்ளிட்ட மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சரியான வரலாற்று குறிப்புகளுடன் கூடிய வழிகாட்டி பலகை அமைத்து, பாழடைந்த கல் மண்டபத்தை சீரமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.