பதிவு செய்த நாள்
05
செப்
2014
12:09
திருத்தணி: சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று, யோக சனிபகவானுக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ளது மனோன்மணி உடனுறை சதாசிவலிங்கேஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில் புதியதாக, யோகசனி பகவான், சூரியனார், விஷ்ணுதுர்க்கை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய தனித்தனி சன்னிதிகள் மைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம் உள்பட, நான்குகால யாக பூஜை நடந்தது. காலை, 7:30 மணிக்கு, சனிபகவானுக்கு பரிகாரஹோமம், மகா தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கலச பூஜையும், அதைத் தொடர்ந்து கலச ஊர்வலமும் நடந்தது. காலை, 10:10 மணிக்கு, புதியதாக அமைக்கப்பட்ட சிலைகள் மீது, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர், சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.