பதிவு செய்த நாள்
08
செப்
2014
12:09
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்றாம் கட்டமாக நேற்று, நகர பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் ௨௯ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, புதுச்சேரி மற்ற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. மூன்று நாட்கள் பூஜைக்கு பிறகு, ௩௧ம் தேதியும், அடுத்து கடந்த ௨ம் தேதியும், இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி பேரவை விழா கமிட்டி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கடற்கரை சாலை டியூப்ளே சிலை அருகே, ராட்சத கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டது.மூன்றாம் கட்டமாக நேற்று, புதுச்சேரி நகரில் பாரதிபுரம், கோவிந்தசாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ௨௦க்கும் மேற்பட்ட சிலைகள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கடற்கரை சாலை சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் உள்ள கடல் பகுதியில் விஜர்சனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.