பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு உற்சவர் அம்பாள் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (8ம் தேதி) பவுர்ணமியை முன்னிட்டு மாலை மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் நான்கு மாட வீதிகளை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பதினாறு கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அப்பர் இல்ல அறக்கட்டளை சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பட்டிமன்றமும் நடந்தன. இரவு 11:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகிக்கு பவுர்ணமி பூஜையும், 12:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.