பதிவு செய்த நாள்
11
செப்
2014
12:09
ஆர்.கே.பேட்டை: அம்மன் ஜாத்திரை திருவிழாவில், வெளியூர் கலைக்குழுவினரின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாமல், கிராமத்து இளைஞர்கள், தாங்களே கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதற்காக, கடந்த ஆறு மாதங்களாக பயிற்சி பெற்று வந்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராம கோவில் திருவிழாக்களில், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நடத்துகின்றனர். கடந்த ஆண்டு ஜாத்திரை திருவிழாவில், சுவாமி வீதியுலாவில், இயந்திரங்களின் உதவியுடன், சிவலிங்கத்திற்கு, விநாயகர், முருகன் தொடர்ந்து பாலாபிஷேகம் செய்வது போன்று வடிவமைத்து, பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். நேற்று முன்தினம் நடந்த அம்மன் வீதியுலாவில், இளைஞர்கள் பொய்க்கால் ஆட்டத்துடன் வலம் வந்தனர். பொய்க்கால் ஆட்டத்தில், கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று, அரங்கேற்றம் செய்து வருவது, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.