பதிவு செய்த நாள்
15
செப்
2014
11:09
திருப்பதி: திருமலையில், பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில், வி.ஐ.பி., பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலை - திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு கூறியதாவது:திருமலையில், வரும் 26ம் தேதி, பிரம்மோற்சவம் துவங்குகிறது. புரட்டாசி மாதத்தில், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால், அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பிரம்மோற்சவ நாட்களில், வி.ஐ.பி., பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகளின் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள அகண்டம் அருகில், புதிய விளக்கு அமைத்ததால், இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, அகண்டம் அருகில், தேங்காய் உடைத்து, கற்பூரம் காண்பிக்க, புதிய வரிசை ஏற்படுத்தப்படும். மேலும், 300 ரூபாய் விரைவு தரிசன, முன்பதிவு டிக்கெட்களை பாமர மக்களும், முன்பதிவு செய்ய வசதியாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள, மீ சேவா கவுன்டர்களில், விரைவு தரிசன டிக்கெட் வழங்க ஆலோசனை நடந்து வருகிறது. தபால் நிலையங்களிலும், விரைவு தரிசன முன்பதிவை துவங்க, அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.