ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரம்மோற்சவத்தில் வெங்கடாஜலபதிக்கு சார்த்துவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துாரில் தினமும் வடபத்ரசாயிக்கு ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படும். மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆண்டாள் அணிந்த மாலை அவருக்கு சார்த்தப்படும்.
ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்தின் போதும் ஆண்டாளுக்கு சார்த்திய பரிவட்டம் ரெங்கநாதருக்கு அணிவிக்கப்படும். திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5ம் நாள் காலையில் நடக்கும் கருட சேவையில், வெங்கடாஜலபதிக்கு சார்த்துவதற்காக நேற்று ஆண்டாளுக்கு மாலை, கிளி, பட்டு சார்த்தப்பட்டது. நான்கு வீதிகளில் சுற்றிய பின் அவற்றை ஸ்தானிகர்கள் ரமேஷ், கிருஷ்ணன் திருப்பதிக்கு கொண்டு சென்றனர். நாச்சியார் டிரஸ்ட் அறங்காவலர் ராம்கோ சிமென்ட்ஸ் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா ஏற்பாடுகளை செய்தார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா கலந்து கொண்டனர்.