பதிவு செய்த நாள்
29
செப்
2014
12:09
கோவை : கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்துவரும், ’108 பெருமாள் திவ்ய தரிசனம்’ என்னும் ஆன்மிக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வருகின்றனர். மதுரை என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ’108 பெருமாள் திவ்ய தரிசனம்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி கொடிசியா ’டி’ அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது; அக்., 5ம் தேதி நிறைவடைகிறது. இதில், திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதப் பெருமாள், அழகிய மணவாளர், கும்பகோணம் சாரங்கபாணி, வில்லுடன் காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள், திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் என 108 ஸ்தலங்களில் தோற்றமளிக்கும் பெருமாளின் தெய்வீக சிலைகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் திருவேளுங்கை அழகிய சிங்கப்பெருமாள், ஆயர்பாடி கிருஷ்ணன், கோவை கோனியம்மன் என பல்வேறு சிலைகளும் பக்தர்களை பரவசப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. பெருமாள், கிருஷ்ணர், ராமர் பட்டாபிஷேகம், விநாயகர் ஓவியங்கள், சிலைகள் என 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திலோபன் கூறுகையில், ”பெருமாள் காட்சியளிக்கும் 108 ஸ்தலங்களுக்கும் மக்களால் செல்லமுடியாது. எனவே, 108 ஸ்தலங்களில் அருள்பாலிக்கும் பெருமாள் சிலைகளை, ஒரே கூரையின் கீழ் இடம்பெற வைத்துள்ளோம். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 6.00 - 8.00 மணி வரை சிறப்பு தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, இரவு 9.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, பெருமாளை தரிசிக்கலாம்,” என்றார்.