பதிவு செய்த நாள்
30
செப்
2014
10:09
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 39 ஆண்டுக்கு பிறகு உற்சவர் சன்னதி விமானம் பழமை மாறாமல், ரசாயன கலவை பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 2015 நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ரூ.7 கோடியில் வடக்கு, தெற்கில் புதிய கோபுரம் மற்றும் கிழக்கு ராஜகோபுரம், மூன்றாம் பிரகாரம், சேதுபதி மண்டபத்தில் மராமத்து செய்யும் பணி, வர்ணம் பூசும் பணி நடக்கிறது. சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் தூண்கள், சுதைகள் பழமை மாறாமல் இருக்க ‘வாட்டர் வாஷ்’ செய்து, ராசாயன கலவையில் வார்னிஷ் பூசும் திருப்பணி நடைபெறுகிறது. பொலிவு பெறும் உற்சவர் விமானம்: 1907-25 ல் சுவாமி கருவறை மற்றும் இடதுபுறத்தில் உள்ள நாயகர் வாசல் உற்சவர் சன்னதி விமானம் கருங்கல்லில் அமைக்கப்பட்டு, 1925 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின், உற்சவர் சன்னதி விமானம் பராமரிப்பு இன்றி கருங்கல் நிறம் மறைந்து தூசி, அழுக்கு படிந்து காணப்பட்டது. இந்நிலையில் அடுத்தாண்டு கும்பாபிஷேகத்திற்கு, உற்சவர் சன்னதி விமானம் பழமை மாறாமல் இருக்க ஊழியர்கள் விமானத்தை ‘வாட்டர் வாஷ்’ செய்து,‘பாலிஉரிதீன்’ எனும் ரசாயன கலவை பூசியதால், 39 ஆண்டுக்கு பிறகு உற்சவர் சன்னதி விமானம் புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது.