பதிவு செய்த நாள்
30
செப்
2014
12:09
திருத்தணி : மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில், மூலவருக்கு நேற்று, சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில், மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், கடந்த, 25ம் தேதி முதல், நவராத்திரி விழா துவங்கியது; அக்.,8ம் தேதி வரை விழா நடக்கிறது.விழாவை ஒட்டி, தினசரி, காலை, 7:30 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள், குங்குமம், பால், சந்தன காப்பு, விபூதி போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகின்றன.நேற்று, காலை 7:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு, அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட கொலு மற்றும் உற்சவர் அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தன. இதில், மத்துார், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம், சந்தானவேணுகோபால சுவாமி கோவிலில், நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. தினசரி மாலை, 3:00 மணிக்கு, உற்சவர் பத்மாவதி தாயாருக்கு, திருமஞ்சனமும், மாலை, 6:00 மணிக்கு, ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. இரவு, 7:00 மணிஅளவில், கோவில் உள்வளாகத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளுகிறார். குளிர்கால மலரான பாரிஜாதம், தற்போது, கோவில் நந்தவனத்தில் பூத்து குலுங்குகிறது. மாலை நேரத்தில் மலரக்கூடியது, பாரிஜாதம். உற்சவர் புறப்பாட்டின் போது, தினசரி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூக்கள் மலர்ந்து, மணம் வீசுகின்றன. நந்தவனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும், சுகந்தமான மணம் கமழ்கிறது.உலா எழுந்தருளும் தாயாரை தரிசிக்க வரும் பக்தர்கள், பாரிஜாத வாசமே, தங்களுக்கு கிடைப்பதற்கு அரிய பிரசாதம் என, உளம் மகிழ்கின்றனர். நேற்று முன்தினம் மாலை, சரஸ்வதி அலங்காரத்தில் தாயார் எழுந்தருளினார். வரும், வெள்ளிக்கிழமை நவராத்திரி உற்சவம் நிறைவடைகிறது.