பதிவு செய்த நாள்
30
செப்
2014
12:09
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, தினசரி மஞ்சள் அம்மனுக்கு தினசரி சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. அதில், நேற்று அம்மன், அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதுபோன்று கொலு பொம்மை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி வடுகபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரிவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு வைத்து, நாள் தோறும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து அம்மன்பாடல்களை பாடி, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரிவிழாவையொட்டி, கொலுவைக்கப்பட்டு நாள் தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.