பதிவு செய்த நாள்
20
அக்
2014
10:10
கோவை : கோவையில் சமண பெண்கள் எட்டு பேர் துறவறம் பூண்டனர். வழியனுப்பும் ஊர்வலத்தில், தங்களது துணி, நகைகளை ஏழைகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர். கோவையை சேர்ந்த சமண மத பெண்கள் ரேகா தலாவத், 40, சோனிகா தலாவத், 25, தீபிகா தலாவத், 25 மற்றும் மோனிகா தலாவத், 24. இவர்களது உறவினர் பெண்கள் சென்னையை சேர்ந்த பூஜா ஜூமர்மல், 25, குடியா ஜெயின், 23, தீபிகா ஜெயின், 23, பூஜா ஜெயின், 24. இந்த எட்டு பெண்களும் தங்களது வாழ்வை அர்ப்பணித்து துறவறம் பூண்ட நிகழ்ச்சி, கோவை, ரங்கேகவுடர் வீதியிலுள்ள ஜெயின் சமூக கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. ராஜஸ்தான் ஜெயின் மூர்த்தி பூஜா சங்கம் சார்பில், துறவறப் பெண்களின் ஊர்வலத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று காலை 6 மணிக்கு எட்டு பெண்களும் ’ஏகாஸ்னா’ விரதம் இருந்தனர். எட்டு பெண்களும் விலை உயர்ந்த நகைககள், பட்டாடைகள் அணிந்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். வழியில் தாங்கள் கண்ட ஏழைகளுக்கு விலையுர்ந்த நகை, துணிகளை வாரி வழங்கி மகிழ்ந்தனர்.
துறவறம் பூண்ட பெண்கள் கூறுகையில், ”மனிதனாக பிறந்தவர்கள் மோட்சம் அடைவதற்கு, இறை சேவையை பின்பற்றினால்தான், இறை நிலையை அடைய முடியும். இல்லையென்றால் மீண்டும் மனிதனாகவோ, விலங்காகவோதான் பிறக்க வேண்டும். எங்கள் விருப்பப்படியும், உறவினர்களின் விருப்பப்படியும் துறவற வாழ்க்கையை மேற்கொள்கிறோம்,” என்றனர்.
இந்த எட்டு பெண்களும் நவ., 12ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜாலுார் மாவட்டத்திலுள்ள அகோர் கிராமத்தில் உள்ள ஜெயின் துறவ மடத்துக்கு செல்கின்றனர். அன்று நாடு முழுவதும் துறவிகளாக மாறிய, 2 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். துறவறம் பூண்ட எட்டு பெண்கள், தங்கள் வாழ்வை அர்ப்பணித்து, இறைசேவை செய்ய உள்ளனர்.
’பேஸ்புக்’, ’வாட்ஸ்அப்’ அனைத்தும் ’பேக் அப்’: துறவறம் பூண்ட பெண்கள் எட்டு பேரும், எம்.பி.ஏ., பி.காம்., மற்றும் பி.பி.எம்., பட்டதாரிகள். மொபைல்போன்களில் பேஸ்புக், ’வாட்ஸ் அப்’ பயன்படுத்தி வந்த இவர்கள், தற்போது தங்கள் மொபைல் போன்களையும் பிறருக்கு தானம் வழங்கி விட்டனர். இப்பெண்கள் இனிமேல் நகை, விலை உயர்ந்த துணி, செருப்பு உள்ளிட்டவற்றை அணிய மாட்டார்கள். ரோட்டில் நடந்து செல்லும் போது, எறும்பு போன்ற எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள்.