பதிவு செய்த நாள்
29
அக்
2014
12:10
திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உண்டியல்கள், நேற்று திறந்து எண்ணப்பட்டதில், 39.53 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.திருப்பதி மலையப்பஸ்வாமி கோவிலுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது. வெளிநாடு, வெளிமாநிலம், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நாள்தோறும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஏதுவாக, 40க்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. மாதந்தோறும் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படும்.நேற்று காலை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில், 39 லட்சத்து, 53 ஆயிரத்து, 630 ரூபாய் ரொக்கமும், 66 கிராம் தங்கம், 720 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.