பதிவு செய்த நாள்
30
அக்
2014
11:10
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவில், நேற்று உற்சவர் சண்முகப்பெருமானுக்கு நடந்த புஷ்பாஞ்சலி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி என்கிற லட்சார்ச்சனை விழா, கடந்த, 24ம் தேதி துவங்கியது. தினமும், காலை 10:00 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தன. விழாவின் நிறைவு நாளில், அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் சூரசம்ஹாரத்திற்கு பதிலாக, புஷ்பாஞ்சலி நடை பெறும். காரணம், முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார். அதனால் தான் புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று, மாலை 4:00 மணிக்கு, திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் முன் இருந்து, 20க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் கூடைகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு எடுத்து சென்றனர். மாலை, 5:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது; தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபட்டனர்.