பதிவு செய்த நாள்
30
அக்
2014
12:10
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில், கடந்த அக்., 23 ல் கந்தசஷ்டி விழா துவங்கியது. சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. நேற்று திருக்கோயில் இருந்து பல்லாக்கில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, நான்கு ரதவீதியில் உலா வந்தனர். பின், மேலவாசல் ரதவீதியில் முருகன் அம்பு எய்தும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நாராயணன் நடத்தி, சூரனை வதம் செய்தார். பின் தீபாரதனை நடந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கண்கணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ராமநாதபுரம் வழிவிடு முருகன், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, பெருவயல் ரணபலி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா அக்., 24ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. சுவாமிக்கு தினமும் மாலை அபிஷேகம், தீபாராதனை நடந்தன. கோயில் உள் பிரகாரங்களில் சுவாமி வீதியுலாகள் நடந்தன. பேச்சாளர்கள் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். இக்கோயில்களில் நேற்று மாலை சுவாமி புறப்பாடு, இரவு சூரசம்ஹாரம் நடந்தது, இதில் சூரனை முருகன் வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வழிவிடுமுருகன், ரணபலி முருகன் கோயில்களில் இன்று காலையிலும், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் இன்று மாலையிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.