பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
ஊத்துக்கோட்டை: மணல் கொள்ளையால், பழமையான சிவன் கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.ஆரணி ஆற்றின் கரையில் சுருட்டப்பள்ளி துவங்கி, ஒவ்வொரு பகுதியிலும் பழமையான சிவாலயங்கள் உள்ளன. இதில், ஊத்துக்கோட்டை அடுத்த பேரிட்டிவாக்கம் பகுதியில், ஆரணி ஆற்றை ஒட்டி உள்ளது குபேரலிங்கேஸ்வரர் கோவில். பழமையான இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சென்று சுவாமியை தரிசனம் செய்வர். கோவில் அமைந்துள்ள பகுதியை ஒட்டி, ஆரணி ஆற்றில் மணல் கொள்ளையர்கள் தொடர்ந்து மணலை திருடி வந்தனர். இதனால், கோவிலை ஒட்டிய கரை தனியாக தென்படுகிறது. மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியை ஒட்டி பேரிட்டிவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. தொடர்ந்து மணல் எடுப்பதால், சாலையை ஒட்டி பெரிய அளவில் பள்ளமாக உள்ளது.மழைக்காலங்களில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படும் போது, கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லும் அபாயம் தோன்றி உள்ளது.எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து, பேரிட்டிவாக்கம் பகுதியில் அபாய நிலையில் உள்ள கோவில், சாலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்னர்.