பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
சென்னை: சென்னையில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா நாளை நடக்கிறது.சிவன் கோவில்களில், ஐப்பசி மாத பவுர்ணமியை தவிர, மற்ற மாதங்களில், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால், சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி பவுர்ணமி தினத்தில் மட்டும், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்ன அலங்காரத்தில் சிவனை வழிபட்டால், ஒரு கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். வழிபாட்டின் பலன், மற்ற உயிர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பிரசாத அன்னத்தை, கோவில் குளத்திலும், ஆற்றிலும் கரைப்பது வழக்கம். நாளை ஐப்பசி பவுர்ணமியையொட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட, நகரின் பல்வேறு சிவன் கோவில்களில், மாலை 6:00 மணி முதல், அன்னாபிஷேக விழா நடக்கிறது.