பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி கிராமத்தில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, 16 ஆண்டுகளாக சிவனை வேண்டி தவம் இருந்த, தலைமை சித்தர் காகபுஜண்டருக்கு, பிரதோஷ நாளில், 16 உருவங்களாக சிவன் காட்சி தந்தார். இதனால், இக்கோவிலில், 5.5 அடி உயரத்தில், 16 முகங்கள் கொண்ட சோடலிங்கமாக, சொர்ணபுரீஸ்வரர் காட்சி தருகிறார்.நேற்று, பிரதோஷ பூஜையையொட்டி, சொர்ணபுரீஸ்வரர், நந்தி பெருமானுக்கு, பால், தயிர், வெண்ணெய், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம், மூலிகை நீர் என, 16 வகையான அபிஷேகம் செய்தனர். சொர்ணபுரீஸ்வரர், நந்தி பெருமான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சிறப்பு பிரதோஷ பூஜை நடந்தது. இதில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், வாழப்பாடி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.