பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
குமாரபாளையம் : வல்லப கணபதி கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். குமாரபாளையம்-இடைப்பாடி சாலை, காவிரிநகர் காந்தியடிகள் சாலையில், வல்லப கணபதி கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம், காலை, கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.அன்று மாலை, 6 மணிக்கு முதல்கால யாக பூஜை, வாஸ்துசாந்தி, பூர்ணாகுதியும் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, திரவிய ஹோமம், நாடி சந்தானமும் நடந்தது. அதை தொடர்ந்து, காலை, 5 மணிக்கு வல்லப கணபதிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அபிஷேக, ஆராதனை, ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி சேர்மன் தனசேகரன், நகர அ.தி.மு.க., செயலாளர் நாகராஜன், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.