பதிவு செய்த நாள்
14
நவ
2014
11:11
சென்னிமலை : சென்னிமலை அடுத்த, முருங்கத்தொழுவு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. கடந்த, 5ம் தேதி இரவு, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் இரவில், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. காலை, ஆறு மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் பூசி, தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். திங்கள் இரவு தலவுமலை மற்றும் வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து, பக்தர்கள் காவடி எடுத்து வந்து, மாரியம்மனை வழிபட்டனர்.நேற்று முன்தினம், பவானி கூடுதுறை சென்று, தீர்த்தம் கொண்டு வந்து, இரவு, 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு, 11 மணிக்கு கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள், காவடி எடுத்து மாரியம்மனை வழிபட்டனர். பின் அதிகாலை, இரண்டு மணிக்கு காளிக்காவலசு பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து பூஜை நடத்தினர்.நேற்று காலை, 7 மணிக்கு, உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.பின், பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலி கொடு த்து, நேர்த்திகடன் செலுத்தினர். மாலை, 3 மணிக்கு குழந்தைகள், சேற்று வேஷம் இட்டு, மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். மாலை, 4 மணிக்கு தேர் நிலை சேர்ந்தது. இரவில், மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடந்தது. இன்று மதியம், மஞ்சள் நீர் உற்சவத்துடன், 15 நாள் விழா நிறைவு பெறுகிறது.இவ்விழாவை தொடர்ந்து, முருங்கத்தொழுவு சுற்று பகுதியில் உள்ள, 14க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.