பதிவு செய்த நாள்
28
நவ
2014
11:11
திருப்பூர் : திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்கலச ஊர்வலம் நேற்று படுவிமர்சையாக நடந்தது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 1ல் நடக்கிறது. இன்று (28) மாலை 5.00 மணிக்கு யாக சாலை பூஜைகள் துவங்குகின்றன.
இதையொட்டி, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்கலச ஊர்வலம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தக்கலசங்களுக்கு, டவுன்ஹால் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வான வேடிக்கையுடன் மாலை 5.00 மணிக்கு ஊர்வலம் துவங்கியது.புதிதாக தயார் செய்யப்பட்ட ஐம்பொன் உற்சவர் சிலைகளில் சக்கரத்தாழ்வார் மலர் பல்லக்கிலும், அன்னப்பறவை வாகனத்தில் லட்சுமி நரசிம்மரும் எழுந்தருளினர். கோபுர கலசங்கள், குதிரை பூட்டிய சாரட் வண்டியில் கொண்டு வரப்பட்டன.
கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ராமன், சீதையுடன் கூடிய பக்த ஆஞ்சநேயர் சிலை, வாகனத்தில் வந்தது. அனுமன் நெஞ்சை பிளக்கும்போது, எம்பெருமானும், மகாலட்சுமியும் தெரியும் வகையில் அச்சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.ஓசையுடன் பறந்து வருவதுபோல், பெரிய அளவில் செய்யப்பட்டிருந்த கருடாழ்வார் சிலை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கேரள கலைஞர்கள், பத்ரகாளி, நரசிம்மர், துர்க்காதேவி, சரஸ்வதி, வராஹ அவதார பெருமாள் வேடமணிந்து வந்தனர். பல்வேறு வண்ணத்தில் பூக்கூடைகளுடன் கேரளாவை சேர்ந்தவர்கள் பூக்காவடியாடி வந்தனர். கோலாட்டம், சலங்கையாட்டத்துடன் செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட வாத்திய இசையும் இசைக்கப்பட்டன. முளைப்பாரி மற்றும் தீர்த்தக்கலசங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
டவுன்ஹாலில் துவங்கிய ஊர்வலம், குமரன் ரோடு, யுனிவர்சல் ரோடு, வளம் பாலம் வழியாக செல்லாண்டியம்மன் கோவில் வந்தது. அங்கு, எம்பெருமான் எதிர்சேவை புரிந்தார். அங்கிருந்து மிஷன் வீதி, அறிவொளி ரோடு வழியாக, விஸ்வேஸ்வரர் கோவில் வந்ததும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், தேரோடும் வீதிகளான அரிசி கடை வீதி, காமராஜர் ரோடு, பூ மார்க்கெட் வீதி வழியாக பெருமாள் கோவிலை வந்தடைந்தது. கும்பாபிஷேக விழா முதல் நிகழ்ச்சியாக நேற்று நடந்த ஊர்வலமே, படுஅமர்க்களமாக அமைந்திருந்தது.