பதிவு செய்த நாள்
28
நவ
2014
12:11
காஞ்சிபுரம் மாவட்டம், வெடால் கிராமத்தில் உள்ள வடவாமுகானீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி சீரழிந்து வருவது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, வெடால் ஊராட்சி. இந்த ஊராட்சியில், புகழ்பெற்ற வசந்த நாயகி உடனான வடவா முகானீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், ராஜ ராஜ சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அம்பாள் சன்னிதி, வலது காலை தொடை மீது வைத்தவாறு வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, விநாயகர் சன்னிதி, துர்கையம்மன், கங்காதேவி உள்ளிட்ட சன்னிதிகள் உள்ளன. மேலும், எங்கும் காண முடியாத ஜேஸ்டா தேவியும், கோவிலின் வலது புறத்தில் வீற்றுள்ளார். இக்கோவிலில், ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்விழா, சோமவார பூஜைகள், மாதம் இருமுறை பிரதோஷம் பூஜைகள், ஆண்டு விழா உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவில், நாளடைவில் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து, சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. முன்னர், இக்கோவிலில் இரண்டு கால பூஜை நடந்தன. தற்போது, ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் அவலம் உள்ளது. எனவே, வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை புனரமைத்து முறையாக பராமரிக்க, இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.