சபரிமலை: அப்பம் தயாரிப்பதில் பிழை ஏற்பட்டால் காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பக்தர்களுக்கு வசதியாக ஹெல்ப்லைன் போர்டுகள் அமைக்கப்படும் என்றும் சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார்,. சபரிமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் அப்பம் தயாரிக்க மூன்று காண்டிராக்டர்களுக்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை நிர்வாகம் கொடுத்துள்ள முறைப்படி, குறிப்பிட்ட அளவு கலவைகள் சேர்த்து ஒரு செட்டில் 846 அப்பம் தயாரித்து ஆயில் பேப்பர் கவரில் ஏழு வீதம் அடைத்து கொடுக்க வேண்டும். இதில் குறைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக சன்னிதான சுற்றுப்புறங்களில் 150, சுவாமி ஐயப்பன் ரோட்டில் 25 ஹெல்ப்லைன் போர்டுகள் உடனடியாக அமைக்கப்படும். பெய்லி பாலம் அமைந்துள்ள பகுதியில் மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் ஸ்டீல் பாத்திரம் மற்றும் குளிர்பானங்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக வியாபாரிகளின் கூட்டம் கூட்டப்பட்டு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும். பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு வரும் பாதையில் பிச்சை எடுப்பவர்களும், அனுமதியின்றி கடை நடத்தும் ரோட்டோர வியாபாரிகளும் அப்புறப்படுத்தப்படுவார்கள். சுவாமி ஐயப்பன் ரோட்டில் போலீஸ் அவுட் போஸ்ட் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.