பதிவு செய்த நாள்
29
நவ
2014
11:11
பழநி: பழநி தண்டாயுத பாணிசுவாமி கோயிலுக்கு குத்தகை, கடை வாடகை, மனை வாடகை செலுத்தாமல் நீண்ட காலமாக பாக்கி வைத்துள்ள 10 பேரின் பெயர் பட்டியலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பழநி கோயிலுக்கு வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
கோயிலுக்கு சொந்தமான கடைகள், நிலங்கள், தேங்காய், பழக்கடை விற்பனை உரிமம் உள்ளிட்டவை குத்தகை, வாடகை முறையில் தனி யாரிடம் விடப்பட்டு உள்ளது. இவர்களில் பலர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குத்தகை, கடைவாடகை உள்ளிட்ட தொகைகளை செலுத்தாமல் உள்ளனர். அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பாக்கிவைத்துள்ள முதல் 10 பேரின் பெயர் பட்டியலை அறிவிப்பு பலகையாக வின்ச் ஸ்டேஷன், ரோப்கார், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்க கோர்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். நீண்டகாலமாக பாக்கியை செலுத்தாத முதல் 10 பேரின் பெயர் பட்டியலை இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று வெளியிட்டுள்ளோம்,’ என்றார்.