பதிவு செய்த நாள்
06
டிச
2014
12:12
திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை கிருத்திகை விழா மற்றும் மகா தீபத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலைக் கோவிலில் குவிந்ததால், ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்கக்கீரிடம், பச்சை மாணிக்கக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கோவில் நுழைவு வாயில் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், பெரிய அகல்விளக்கில், 300 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீட்டர் நீளமுள்ள திரியில் மகா தீபம் ஏற்பட்டது.
அப்போது மலைக்கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா, அரோகரா என, பக்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவ பெருமான் மாடவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.