பழநியில் "அரோகரா கோஷத்துடன் ஒளி வீசிய திருகார்த்திகை தீபம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2014 12:12
பழநி: பழநி மலைக்கோயிலில் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பழநியில் கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய கார்த்திகையை முன்னிட்டு பகல் 2 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர் தீபாராதனையும், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி தீப ஸ்தம்பம் அருகேயுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். மூலவர் ஞானதண்டாயுதபாணி சன்னதியிலிருந்து பரணி தீபம் எடுத்துவரப்பட்டு உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பக்தர்கள் "வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா, பழநியாண்டவருக்கு அரோகரா என சரணகோஷங்களை எழுப்பினர். கார்த்திகைபொறி, அப்பம் நைவேத்திய பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருஆவினனன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலைகோயிலுக்கு செல்லும் படிப்பாதை , திருஆவினன்குடிகோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.