பதிவு செய்த நாள்
16
டிச
2014
10:12
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான சைவ, வைணவ தலங்களில் மார்கழி மாத வழிபாடு, இன்று காலை முதல், வழக்கம் போல் துவங்கும் என, கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. தமிழ் மாதங்களில், கார்த்திகை முடிந்து மார்கழி துவங்கும் நாளில் இருந்து, மார்கழி மாத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில், சைவ தலங்களில் திருவெம்பாவை; வைணவ தலங்களில் திருப்பாவை சேவை நடக்கும். வழக்கமாக, நாள்காட்டியில் குறிப்பிடப்படும் நாளின் அடிப்படையிலேயே, மார்கழி மாத பிறப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வழிபாடு துவங்கும். இந்த ஆண்டு, நாள்காட்டி அடிப்படையில் டிச., 16ம் தேதியான இன்று காலை, மார்கழி மாதம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது. ஆனால், ஜோதிட கணிப்புகளின்படி, இன்று பகல், 1:30 மணிக்கு தான் மார்கழி மாத பிறப்பு இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கோவில்களில் மாத வழிபாடு எப்போது துவங்கும் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
குழப்பம் இல்லை: இதுகுறித்து, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பட்டாசாரியர்களில் ஒருவரான சேஷாத்ரி கூறியதாவது: மார்கழி மாத பிறப்பை கணக்கில் கொண்டு பார்த்தாலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் நாள்காட்டியின்படி, இன்று காலை முதலே, மாத வழிபாடுகளை துவங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் மார்கழி மாத பிறப்பை கணக்கிட்டு, அடுத்த நாளில் இருந்து வழிபாடு துவங்குவதாக கூறப்படுகிறது. அது அவர்களது விருப்பம். அதனால், ஒரு குழப்பமும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். எனவே, பெரும்பாலான கோவில்களில் வழக்கம் போல் மார்கழி மாத வழிபாடு இன்று காலையே துவங்குவது உறுதியாகிஉள்ளது. எனினும், குறிப்பிட்ட சில கோவில்களில், பிற்பகலில் மார்கழி மாத வழிபாடு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.