பதிவு செய்த நாள்
11
ஜூன்
2011
10:06
மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி அணையில், புதையுண்ட நிலையில் இருந்த சாமி சிலைகளை பொதுமக்கள் மீட்டனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே அவலாஞ்சி அணை உள்ளது. தற்போது, அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. நேற்று காலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சிலர், அணையில் தண்ணீர் குறைந்த இடத்தில், சாமி சிலை தெரிவதை பார்த்தனர். இதையடுத்து, அணையில் புதையுண்ட நிலையில் இருந்த விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, அம்மன் உள்ளிட்ட 6 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. அந்த சிலைகள், எமரால்டு பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டன. எமரால்டு பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், ""அணையில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், ஏதாவது ஒரு பகுதி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டதாக இருக்கக்கூடும். கோவிலில் வைத்து கும்பாபிஷேகம் செய்திருந்தால் சாமி சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், மீட்கப்பட்ட பல சிலைகளில் கண் திறக்கவில்லை. எதற்காக அணையில் விட்டுச் சென்றனர் என தெரியவில்லை, என்றனர். எமரால்டு போலீசார் விசாரிக்கின்றனர்.