பதிவு செய்த நாள்
24
டிச
2014
11:12
ஊட்டி : நீலகிரியில் வாழும் கோத்தரின மக்கள், மண்ணை போற்றும் விதமாக, பானை செய்து வழிபடும் பண்டிகை, கோக்கால் கிராமத்தில் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் கோத்தரின மக்கள், வாழ வைக்கும், மண்ணை முக்கிய தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஊட்டி அருகே, கோக்கால் கிராமத்தில் வாழும் கோத்தரின மக்கள், நேற்று மண்ணை வழிப்படும், அய்யனோர், அம்மனோர் குல தெய்வ பண்டிகையை கொண்டி வருகின்றனர்.இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக, ஊரில் உள்ள பெண்கள், ஊரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மண்ணை, தலைச்சுமையாக கொண்டு வந்து, அதில், பானை செய்வதற்கான வழிபாட்டை நேற்று நடத்தினர்.வரும் நாட்களில் பானையை செய்து, அதில், பாரம்பரிய உணவான சாமையில் உணவு செய்து, தெய்வத்துக்கு படைத்து, தாங்களும் உண்பர். இந்த பண்டிகை வரும் 31ம் தேதி வரை, நாள்தோறும் நடக்கிறது. நிறைவு நாளில், கலாச்சார இசை, நடனங்கள் இடம் பெறும். இதனை காண, உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவது வழக்கம்.