பதிவு செய்த நாள்
24
டிச
2014
11:12
கிருஷ்ண கான சபாவில், சமீபத்தில், லட்சுமி ராமசுவாமியின், நடன நிகழ்ச்சி நடந்தது. லட்சுமி ராமசுவாமி, சித்ரா விஸ்வேஸ்வரனின் பிரதான சிஷ்யை. பத்மா சுப்ரமணியம் மற்றும் கலாநிதி நாராயணன் ஆகியோரிடமும் பயிற்சி பெற்றவர். பல அரிய பரத நாட்டிய பதிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உணர்வின் உச்சம்: நிகழ்ச்சியில், முதலில், ராகமாலிகையில் அமைந்த தோடய மங்கலத்தில் துவங்கினார். பாபநாசம் சிவனின், தன்யாசி வர்ணத்திற்கு இவர் ஆடிய விதம், அனைவரையும் அனுபவித்து அசர வைத்தது. வானதி ரகுராமன் குரல், நடனத்திற்கு மேலும் உணர்ச்சியை கொடுத்தது. வேத கிருஷ்ணா ராமின் மிருதங்கம், ஜெயஸ்ரீராமநாதனின் நட்டுவாங்கம், நிகழ்ச்சிக்கு மேலும் வலுசேர்த்தன. மாரிமுத்தாபிள்ளை, சுருட்டி ராகத்தில் இயற்றிய, வஞ்சப் புகழ்ச்சியாக அமைந்த பாடலுக்கு, இவரின் நடனம், உணர்ச்சியின் உச்சத்தை காட்டும்படியாக அமைந்தது.
ஆனந்தம்: அழகிய சொக்கநாதப் புலவர் பாடிய, ’வாராதிருந்தால் இனி நான் உன்’ என்ற, காந்திமதி பிள்ளைத் தமிழுக்கு, இவர் ஆடிய நடனம் மறக்க முடியாது. ஒரு குழந்தையை நடந்து வர சொல்லுவது தாய்க்கு உன்னதமான அனுபவம். அதுவும் காந்திமதி அம்மனையே தன்னிடம் நடந்து வரச்சொல்லி, அந்த நடையை ரசித்து அனுபவித்து ஆனந்தப்படுவது அதைவிட ஆனந்தம். அதை, தத்ரூபமாக ஒரு தாயின் உணர்வுடன், லட்சுமி ராமசுவாமி, தனது நாட்டியத்தில் உணர்த்தினார். கடைசியாக மிகவும் அற்புதமான ஒரு பாடல். நவராகமாலிகையில் அமைந்த அந்த பாடலை இயற்றியவர், ரகுராமன். அதற்கு இயை அமைத்தவர், ஜெயமங்களா கிருஷ்ணமணி.
நவராகமாலிகை: பாடலில் முதலில், துர்கா, பாலினி, சிவசக்தி ஆகிய ராகங்களில் துர்க்கையையும், கமல மனோகரி, அம்ருதவர்ஷினி, கனகாங்கி ராகங்களில் மகாலட்சுமியையும், நிறைவாக, சரஸ்வதி, பூர்ணசந்திரிகா, கல்யாணி ராகங்களில் சரஸ்வதியையும் போற்றி பாடல் வரிகள் அமைந்துள்ளன. லட்சுமி ராமசுவாமி, இந்த பாடலுக்கு அபிநயித்து ஆடியது முப்பெரும் தேவியர்களே அரங்கத்தில் வந்தது போல் இருந்தது. -வேதாந்த ராமானுஜம்-