பதிவு செய்த நாள்
24
டிச
2014
12:12
கோவை: காவிரியில் ஒரு முறை நீராடி ஸ்ரீரங்கநாதரை தரிசித்தால், கங்கையில் மூன்று நாட்கள் புனித நீராடிய புண்ணியம் கிடைக்கும், என, திருச்சி கல்யாணராமன் பேசினார். ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்கு 12 மாதங்கள் திருவிழா நடக்கும். பெருமாளும், தாயாரும், பங்குனி உத்திரம் அன்று தான் ஒன்றாக காட்சி தருவர். இதற்காக அர்ஜூனன் ஸ்ரீரங்கம் சென்றான். அவன் அங்கு வந்து தரிசினம் செய்ததால், அர்ஜூன மண்டபத்தை எழுப்பி, வைகுண்ட ஏகாதசியின் முதல் 10 நாட்கள் உற்சவம் அங்கு நடந்தது. கங்கை, பெருமாளின் திருவடியில் உற்பத்தியாகிறது. அதேபோல், காவிரியில் தினந்தோறும் பெருமாளின் திருவடிகள் படுகின்றன. கங்கையில் மூன்று நாட்கள் தங்கி நீராடினால் கிடைக்கும் புண்ணியம், காவிரியில் ஒரு நாள் நீராடி ரங்கநாதனை தரிசனம் செய்தால் கிடைக்கும்; அது மட்டுமல்ல; இதுவரை செய்த பாவம் மட்டுமல்ல, இனிமேல் செய்யப் போகும் பாவங்களும் போய்விடும். தற்சமயம் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடந்து வருகிறது. இச்சமயத்தில் வைணவ தலங்களான, 108 திவ்ய தேசத்தில் முதன்மையான தலமான, ஸ்ரீரங்கத்தில் தங்கி, ரங்கநாதரை தரிசித்து, வழிபாடு செய்தால், அனைத்து பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.