சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்காக பம்பையில் ’அவசரகால சேவை மையம்’ திறக்கப்பட்டுள்ளது. பம்பை ஹில்டாப் விபத்து, புல்மேடு விபத்து போன்றவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு முதல் பம்பையில் ’அவசரகால சேவை மையம்’ அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பம்பை தகவல் மையம் அருகே இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. கேரள வருவாய்துறை அமைச்சர் அடூர் பிரகாஷ் திறந்து வைத்தார். அரசின் 20 துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் செயல்படும். அவசர கால தேவைக்கான நவீன தகவல் தொடர்பு வசதிகள் இங்கு உள்ளன. இன்டர்நெட், வயர்லெஸ், டெலிபேக்ஸ், ஹாம்ரேடியோ, ஹாட்லைன் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மத்திய அதிரடிப்படை வீரர்கள், போலீஸ், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பர். மகரவிளக்கு காலம் வரை இம்மையம் இயங்கும்.