பதிவு செய்த நாள்
24
டிச
2014
12:12
திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு வழங்கப்படும், காணிக்கைகளை கணக்கிட, புதிய கட்டடம் கட்ட, தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களால் இயன்ற காணிக்கைகளை, உண்டியலில் செலுத்துகின்றனர். இதற்காக, கோவிலுக்குள், தேவஸ்தானம், பெரிய உண்டியல் ஒன்றை வைத்துள்ளது. காணிக்கைகளை கணக்கிட, கோவிலுக்குள் உள்ள, சம்பங்கி பிரகாரத்தில் (குபேர மூலை), ’பராக்காமணி’ என்ற பிரிவை, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இங்கு காணிக்கை கணக்கிடப்பட்டு, வங்கிகளில் டிபாசிட் செய்யப்படுகிறது. தற்போது, திருமலைக்கு, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், உண்டியல் வருமானமும் அதிகரித்து வருகிறது. இதனால், காணிக்கைகள் பிரிக்கப்பட்டு, நாணயங்கள், திருப்பதியில் உள்ள, தேவஸ்தான தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கணக்கிடப்படுகிறது. நாள்தோறும், நாயணங்கள் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு, கோவில் மதில் சுவரில், இரும்பு கம்பி அமைத்து, நாணயங்கள் கொண்டு வர, தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டனர். இது, ஆகம விதிக்கு முரணாக இருப்பதாக, பலர் குற்றம் சாட்டியதால், சுவரில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பி அகற்றப்பட்டு, நாணய மூட்டை, கோவிலுக்குள் வைக்கப்பட்டது. நாணய மூட்டைகள், அளவுக்கு அதிகமாக சேர்ந்ததால், கடந்த ஒரு மாதமாக ஊழியர்கள், கல்யாண உற்சவம் முடிந்த பின், மதியத்திற்கு மேல், அந்த மண்டபத்தில் கணக்கிட்டு வருகின்றனர். காணிக்ககை கணக்கிடும் இடத்தில், இட பற்றாக்குறை நிலவி வருவதால், கோவிலுக்கு வெளியில், புதிய கட்டடம் கட்ட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.