காரைக்கால் : காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில், தங்க காக்கை வாகனத்தில் பகவான் வீதி உலா நடந்தது. காரைக்கால், திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 31ம் தேதி முதல் சுப்ரமணியர் உற்சவமும், 3ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது. 4ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமிகள், வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதல் நடந்தது. 8ம் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், 10ம் தேதி தேர் திருவிழாவும் நடந்தது. நேற்று முன்தினம் செண்பக தியாகராஜ சுவாமிகள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சனீஸ்வர பகவான், தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார். நான்கு மாட வீதிகள் வழியாக நடந்த வீதிஉலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு தெப்போற்சவம் நடந்தது. தொடர்ந்து இன்று 13ம் தேதி நடராஜர் அனுக்கிரக தீர்த்தம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.