குளித்தலை: குளித்தலை அருகே நேற்று நடந்த செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருதூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு மருதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலில், பல லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடந்தது. கடந்த 10ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. அப்போது பணிக்கம்பட்டி, கணேசபுரம், குப்புரொட்டிப்பட்டி, கூடலூர், ஆதிநந்தம், நடுப்பட்டி மற்றும் கோவில் குடிப்பாட்டுகாரர்கள் காவிரியாற்றில் இருந்து ஸ்வாமி சிலைக்கு அபிஷேகம் செய்ய புனித நீர் எடுத்து வந்தனர். இரண்டாம்கால பூஜைக்கு பிறகு, நேற்று அதிகாலை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் சிறப்பு வழிப்பாடு நடந்தது. காலை 7.45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரம் உள்ளிட்ட விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.