திருநெல்வேலி: கேரளா அச்சன்கோயில் ஐயப்பன் கோயில் மகோத்சவ திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.கேரளா அச்சன்கோயில் தர்மசாஸ்தா கோயில், பரசுராமன் பிரதிஷ்டை செய்த ஸ்தலமாகும். மார்கழி மகோத்சவ விழா கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்கக் கொடிமரத்தில் தந்திரி கண்டரரு மோகனரு சிறப்பு பூஜைகள் செய்து துவக்கிவைத்தார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ.,தொலைவில் இருப்பதால் தமிழக பக்தர்களும் வழிபாட்டில் திரளாக பங்கேற்றனர். தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து திரு ஆபரணங்கள் அணிவித்து தீபாராதனை நடந்தன. தேரோட்டம் நேற்று பகலில் நடந்தது. கேரளாவில் உள்ள கோயில்களில் தேரோட்டம் நடப்பதில்லை. அச்சன்கோயில் உள்ளிட்ட ஒன்றிரண்டு கோயில்களில் மட்டுமே தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் தர்மசாஸ்தா தேரினை இழுத்தனர். தேருக்கு முன்னதாக சுவாமியின் உடைவாள் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போது கருப்பன்துள்ளலும் நடந்தது. இன்று 26ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. நாளை 27ல் மண்டல பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.