பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா, சவுராஷ்ட்ர குலகன்னி புஷ்கலாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கேரளா ஆரியங்காவில் நடக்கும் ஐயப்பன் திருக்கல்யாணத்தையடுத்து, தமிழகத்தில் பரமக்குடியில் ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதன் படி, புஷ்கலாதேவி சவுராஷ்ட்ரா குலதேவி என்பதால் பரமக்குடியில் அதிகம் வாழும் இம்மக்களால் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்படுகிறது. முன்னதாக நேற்று (டிச. 25) மாலை 6 மணிக்கு தர்மசாஸ்தா - புஷ்கலா தேவிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தன. பின்னர் 10.15 மணிக்கு ஊஞ்சல் சேவையில், தர்மசாஸ்தா புஷ்கலா தேவிக்கும் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. நலுங்குசுற்றுதல் உள்ளிட்ட சடங்குகளையடுத்து, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. பட்டுப்பல்லக்கில் புஷ்கலாதேவி சமேத தர்மசாஸ்தா வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள், விழாக்குழுவினர், பக்தகோடிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.