பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
தஞ்சை டவுன் நாலுகால் மண்டப வீதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை முதலே பூதேவி, ஸ்ரீதேவி சமேத நம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பிரசன்ன வெங்கடேச பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவிக்கு சமேதராக, நம்பெருமாள் அலங்காரத்தில் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நம்பெருமாளை தரிசிப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
மானம்புசாவடி பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், வெண்ணாற்றங்கரை மாமணி பெருமாள் கோவில், தெற்கு வீதி கலியுக வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், கீழராஜ வீதி வரதராஜ பெருமாள் கோவில், பள்ளி அக்ரஹாரம் சுந்தரேஸ்வர பெருமாள் கோவில், கண்டியூர் சாப விமோஜன பெருமாள் கோவில், புன்னைநல்லூர் கோதாண்டராமர் கோவில்களிலும், நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசித்தனர். புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை மேலவீதி பிரதாப வீர ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று அதிகாலை முதல் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.