பழநி : பழநியில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை, வழிபாடுகள், அன்னதானம் நடந்தது.
பழநி அருள் ஜோதி வீதியில் உள்ள அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் கேரள ஆகம விதி முறைகளின் படி ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு வாழைமரம் கொண்டு கோயில் அமைத்து சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் செய்து, தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பட்டத்து விநாயகர் கோயிலில் இருந்து ஐயப்ப சுவாமியை அலங்காரம் செய்து பெண்கள் விளக்கு ஏந்தி பஞ்சவாத்தியங்கள் முழங்க யானைமேல் பவனி வந்து ஐயப்பன் அருள்பாலித்தார். இரவு விளக்கு பூஜை, பேட்டை துள்ளல், ஐயப்பன் பாட்டு என சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.