பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நம்பெருமாள் அதிகாலை பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
*வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகிதபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. நாராயணபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வேட்டமங்கலம் பஞ்சாயத்து நல்லிக்கோவில் கிருஷ்ணன் கோவிலில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
*தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., சேங்கல் மலை ஸ்ரீவாரி வரதராஜ பெருமாள் கோவிலில், விசேஷ பூஜையை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
*குளித்தலை, நீலமேகபெருமாள் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது, குளித்தலையைச் சுற்றியுள்ள லாலாபேட்டை, அய்யர்மலை, தோகைமலை, கழுகூர், சிவாயம், வலையப்பட்டி, மேட்டுமருதூர், நங்கவரம், நச்சலூர், இனுங்கூர், தண்ணீர்பள்ளி, மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
* கிருஷ்ணராயபுரம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் பீஸ்ம வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாராயண பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியேறி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால ஸ்வாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மன்னார்குடி, ராஜ கோபால ஸ்வாமி கோவிலில், பகல் பத்து உற்சவம் நேற்றுடன் முடிவடைந்து, நேற்று முன்தினம் ஸ்ரீவித்ய ராஜகோபாலன், மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று காலையில், தாயார், பெருமாள் சன்னதிகளில் செங்கமலத்தாயாருக்கும், ஸ்ரீவித்யராஜகோபாலனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 7 மணிக்கு பரமபதவாசல் வழியாக சொர்க்கவாசல் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சொர்க்கவாசல் திறப்பு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகத வல்லித்தாயார் சமேத மதன கோபால ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் புதிய சொர்க்கவாசல் வழியாக சன்னதி தெருவிற்கு வந்து, கோவில் எதிரே உள்ள கம்பம் ஆஞ்சநேயரை, 3 முறை வலம் வந்து, ஆண்டாள் சன்னதியில் சேவை சாதித்தார். இரவு, கருட வாகனத்தில் வாணவேடிக்கையுடன் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் கல்யாணி, தக்கார் மற்றும் உதவி ஆணையருமான சுரேஷ், கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை, அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. விழாவையொட்டி, சீதேவி, பூதேவி சமேத அபீஷ்ட வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, காலை, 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெருமாள் பரமபத வாசலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், எம்.எல்.ஏ., காமராஜ், கோவில் மேலாளர் பழனிவேல் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர். இதே போல கள்ளிமேடு பெருமாள் கோவில், நாகக்குடையான் பெருமாள் கோவில், கோவில்பத்து பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. அரியலூர்: அரியலூர் கோதண்டராமசாமி கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. பரமபத வாசல் வழியாக சிறப்பு அலங்காரத்தில், நம்பெருமாள் எழுந்தருளி, ஆழ்வாராதிகளுக்கு மோட்ச சேவை அளித்தார். தொடர்ந்து, நான்கு மாட வீதிகளிலும் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.
*ஜெயங்கொண்டம் அருகே உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில், நேற்று அதிகாலை நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழா உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.