பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
ஈரோடு : வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, 22ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை பகல் பத்து உற்சவம் நடந்தது. 31ம் தேதி மாலை, ஐந்து மணிக்கு மேல் சுவாமி, மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.நேற்று அதிகாலை, 2.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை படித்து, ஸ்வாமிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. பின், வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கஸ்தூரி அரங்கநாதர், பக்தர்கள் கூட்டத்துக்கு இடையே, சொர்க்க வாசலை கடந்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சொர்க்க வாசலை (பரமபத வாசலை) கடந்து வழிபட்டனர்.பின், ஸ்வாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முதல் இராப்பத்து உற்சவம் துவங்கியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை, ஆறு மணி முதல் நள்ளிரவு இரண்டு மணி வரை இன்னிசை கச்சேரி நடந்தது.
தினமும் ஸ்வாமிக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. சொர்க்க வாசல் திறப்பு தரிசனத்துக்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும், ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதஸ்வாமி கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.கடந்தாண்டு, 31ம் தேதி இரவு எஸ்.பி., அலுவலகம் அருகே புத்தாண்டு பிறப்பை கொண்டாட, பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
கொண்டாட்டத்தின் போது வாலிபர்களுக்கு இடையே, அவ்வப்போது ரகளை நடந்தது.ஈரோடு எஸ்.பி., சிபி சக்கரவர்த்தியும், சீருடையின்றி ப.செ.பார்க் சிக்னல் அருகே கேக் வெட்டி, புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். அவருடன் ஏ.டி.எஸ். பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி., கள் பலர் உடன் இருந்தனர்.