பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
பெங்களூரு;ஆங்கிலப் புத்தாண்டுடன் வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்பட்டதால், பெங்களூரின் பெரும்பாலான கோவில்களில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஒரே நாளில், புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசியும் வந்தது, சுப சகுன அடையாளம் என மக்கள் நம்பியதால், மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
வைகுண்டு ஏகாதசி தினமான நேற்று, பக்தர்கள், பெங்களூரு நகரிலுள்ள வெங்கடேச பெருமாள், சீனிவாசா, விஷ்ணு கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். வெங்கடேச பெருமாள் கோவில்களில், சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பக்தர்கள் வரிசையாக நின்று தரிசித்தனர்.பெங்களூரின் கோட்டே வெங்கடேஸ்வரா கோவில், ஸ்ரீநகர், கிரிநகர், ராஜராஜேஸ்வரி, கெங்கேரி பெட்டனபாளையா, சஜ்ஜன்ராவ் சர்க்கிள், மகாலட்சுமி லேஅவுட், ஜெ.பி.நகர் உட்பட பல்வேறு கோவில்களில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.பாண்டுரங்கா விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி, 27 மணிநேரம் விஷ்ணு சஹஸ்ரநாமம், கூட்டு பாராயண நிகழ்ச்சியை நடத்தியது. வெங்கடேச பெருமாளை தரிசித்த பக்தர்களுக்கு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.நேற்று காலை முதலே, பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது.