பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
05:06
சபரிமலை: சபரிமலையில், அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும்போது, பிற மொழி பக்தி பாடல்கள் ஒலிக்கச் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மாத பூஜை, சிறப்பு பூஜை, உற்சவங்கள் ஆகியவற்றிற்காக திறக்கப்படும். கோவிலில், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளிலான பக்தி பாடல்கள் மட்டுமே, ஒலிபரப்பப்பட்டு வருகிறது. கேரள, தமிழக மாநிலத்தவர்களைப் போலவே, ஆந்திரா, வடமாநில மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள், சபரிமலைக்கு வந்து செல்கின்றனர். இதனால், சபரிமலையில் இனி நடை திறக்கப்படும் காலங்களில், மலையாளம், தமிழ் ஆகியவற்றுடன், தெலுங்கு, இந்தி, கன்னடம் என, பிற மொழிகளிலான பக்தி பாடல்களும் ஒலிபரப்ப, முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சிறப்பு கமிஷனரும், பத்தனம்திட்டா மாவட்ட நீதிபதியுமான எச்.எச்.பஞ்சாபகேசன் தான், இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டும், இத்திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இதற்கான விழா, நாளை, ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் நாளில், தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் துவக்கி வைக்கவுள்ளார். இனி, சபரிமலை நடை திறந்திருக்கும் நாட்களில், பிற மொழிகளிலான பக்தி பாடல்களும், ஒலிக்க உள்ளது.