பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
10:06
மதுரை: சந்திர கிரகணத்தை ஒட்டி, குறிப்பிட்ட நட்சத்திரத்தினர் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளதாவது. இரவு 11.52க்கு தொடங்கி அதிகாலை 3.32 மணிக்கு கிரகணம் முடியும். விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4ம் பாதத்தில் கேது கிரஸ்தமாக உண்டாகும் இக்கிரகணம், பவுர்ணமி திதியில் துவங்கி பிரதமை திதியில் முடிகிறது. இதையொட்டி புதன்கிழமை, ஆயில்யம், அனுஷம், கேட்டை, மூலம், ரேவதி நட்சத்திரங்கள், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கோவில்களுக்குச் சென்று தங்கள் பெயரில் அர்ச்சனையும், பரிகார பூஜையும் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்த பின், சந்திர தரிசனம் செய்வது நல்லது. சூன்ய திதியாக இருப்பதால் தர்ப்பணம் செய்யக்கூடாது. பவுர்ணமி கிரிவலம் செல்பவர்கள் நாளை காலை துவங்கி மதியம் 2.30 மணிக்குள் மலை சுற்றி முடித்து விட வேண்டும். கிரகண அதிபதியாக சந்திரன் வருவதால், கிரகணத்துக்குப் பிறகு வரும் காலத்தில் சூறாவளி காற்று வீசும்; நல்ல மழை பெய்யும். நாளை பகல் 2.30 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சந்திர கிரகண நிவர்த்தி வழிபாடு:
முழுச்சந்திர கிரகணம், இந்த ஆண்டு 15.6.11 புதன் கிழமை அன்று, இரவு 11:53 மணிக்குத் துவங்கி, 16-ஆம் தேதி அதிகாலை 3:32 மணிக்கு முடிகிறது. இதனை இந்த 21-ஆம் நூற்றாண்டின், அடர் இருள் சந்திர கிரகணம் என்கின்றனர். இதே போன்ற சந்திரகிரகணம் 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஏற்பட்டது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது நிகழ்வதே சந்திர கிரகணம். பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், அது மறைக்கப்படுகிறது. அந்த நிழலில் சந்திரன் மெல்ல மெல்ல நகரும்போது, இளம் சிவப்பு நிறத்தில் இருப்பதாகச் சொல்வர். இந்த நாளில், கதிரியக்கத்தின் பாதிப்பு ஏற்படாமலிருக்க, அப்போது உணவு ஏதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த உணவில் தாக்கம் ஏற்பட்டு, அதனை உட்கொள்வதன் மூலமாக நோய் ஏற்படலாம். அதேபோல், மௌனம் அனுஷ்டிப்பதும், அநாவசிய பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பதும் நன்று. கிரகணக் கதிர்வீச்சுகள், நம் தோல் பகுதியைத் தாக்காமல் இருக்க அது உதவும். வீட்டில் <உள்ள பொருள்களில் கிரகணத் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம். அதனால்தான் விடிந்ததும், அணிந்திருந்த உடைகள், பாய், போர்வை என அனைத்தையும் நனைத்து, நீராடிய பிறகே, காபி-டீ ஆகியன உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். கிரகணத்தின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க தர்ப்பை புல்லை குடிக்கும் நீரிலும், உணவுப்பொருள்களிலும், சுவாமி அறையிலும் வைப்பது நல்லது. அத்துடன் கிரகண தோஷங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, நம் இஷ்ட தெய்வங்களை, குலதெய்வங்களை மனதாரப் பிரார்த்தனை செய்வது நற்பலனைத் தரும்!
குறிப்பாக, ததி சங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம்: நமாமி சம்போர் மகுட பூஷணம் எனும் சந்திர பகவானுக்கு உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சந்திர பலம் கிடைக்கும்; சந்தோஷம் பெருகும்; சங்கடங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! குறிப்பாக, மூல நட்சத்திரக்காரர்கள், அதற்கு முந்தைய கேட்டை நட்சத்திரக்காரர்கள், பிந்தைய பூராட நட்சத்திரக்காரர்கள் ஆகியோர் இந்த ஸ்லோகத்தை எழுதி, நெற்றிப் பட்டமாகவோ அல்லது கையில் கங்கணமாகவோ கட்டிக்கொண்டு, மனதார ஸ்லோகத்தைச் சொல்லி, பகவானைப் பிரார்த்திக்க வேண்டும். பிறகு அதனைக் கழற்றிவிட்டு, அத்துடன் தேங்காய், பழம், தட்சணை ஆகியவற்றை எவருக்கேனும் வழங்கி, சாந்தி செய்துகொள்வது, கிரகண தோஷத்தில் இருந்து பாதுகாக்கும்; பலம் சேர்க்கும். அத்துடன் நவக்கிரகத்தில் உள்ள சந்திரபகவானுக்கு தீபம் ஏற்றி மனம் நிறையப் பிரார்த்தனை செய்யுங்கள்; இதனால் அவனும் குளிர்ந்து நமக்கும் குளிர்ச்சியான வாழ்வு தருவான்.
இயற்கை, மனிதர்கள், தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாமே சூரியக் கதிர்களில் இருந்து பரவுகிற சக்தியால் இயங்குகின்றன. இதனால்தான், சூரியனின் திசை பார்த்து, காலையிலும் பகலிலும் மாலையிலும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கச் சொல்கிறது சாஸ்திரம்: சூரிய நமஸ்காரம் செய்வதை வலியுறுத்துகின்றன புராணங்களும், சாஸ்திரங்களும். நம்முடைய இன்ப-துன்பங்களுக்கு, நமது சிந்தனைகளும் செயல்பாடுகளுமே காரணம். சிந்தனையில் மாற்றங்களும் செயல்பாட்டில் வேறுபாடுகளும் வருவதற்குச் சூரிய-சந்திரக் கதிர்களின், சக்திகளின் பங்கு வெகுவாக உள்ளது. சூரிய -சந்திரக் கதிர்களின் தாக்கங்கள் நிறைந்திருக்கும் தருணத்தை கிரகணம் என்கிறோம். அந்தக் கிரகணத்தில்... அதாவது, அப்போது பூமியில் வியாபிக்கிற கதிர்களின் தாக்கம், கர்ப்பப்பையில் இருக்கிற சிசுவைக்கூட பாதிக்கவல்லது என்கின்றன வானியல் சாஸ்திரங்கள்.