கடலூர்: சிதம்பரம் அன்னபூரனீஸ்வரி கோவிலில் வரும் 26ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சிதம்பரம் சபாநாயகர் கோவில் பொது தீட்சதர்கள் நிர்வாகத்திற்குட்பட்ட அன்னபூரனீஸ்வரி கோவில் திருப்பணிகள் நடத்தி கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி திருப்பணிகள் முடிந்து, நேற்று கணபதி ஹோமம் துவங்கியது. இன்று 23ம் தேதி மகா பூர்ணாஹூதி, தீபாரதனையும், இரவு முதல் கால பூஜையும்; 24ம் தேதி 2ம் கால யாக பூஜையும், இரவு 3ம் கால யாக பூஜையும்; 25ம் தேதி காலை 4ம் கால பூஜையும், மாலை 5ம் கால மற்றும் இரவு 6ம் கால பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி காலை கோ பூஜை, கஜ பூஜை, கட யாத்ராதானம் புறப்பாடாகி 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.