பதிவு செய்த நாள்
24
ஜன
2015
10:01
யாரப்பா... அங்க போய்ட்டு இருக்கீங்க.. அது, பொம்ளைங்க கும்மியடிக்கிற எடமுங்க... கொஞ்சம் அக்கட்டலா போயிடுங்கப்பா... ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிப்பு வர, மினுமினுக்கிற மிட்டாய் ரோஸ் நிற சர்ட்டும், வெளிர் மஞ்சளில் வேஷ்டியும் அணிந்த இளவட்டங்கள், அறிவிப்பை துளியும் சட்டை செய்யாமல் அங்கேயே நிற்கின்றனர். சில நிமிடங்களில், கிராமத்து பாட்டி, கரகரத்த குரலில், ஸ்ருதி மாறாமல், "ஓலையக்கா கொண்டயில ஒரு கூட தாழம்பூ... தாழம்பூ சித்தாட... தல நெறய முக்காடு, என, மைக்கில் பாட, வட்டமாக நின்ற இளைஞிகளும், பெண்களும், வெவ்வேறு குரல்களில், அதே பாட்டை, பின்பாட்டு பாட, அங்கே நிகழ்கிறது கும்மியடித்தல் வைபவம்.
ஆம்... தமிழகத்தில் மெல்ல அழிந்து வரும் பாரம்பரிய கலைகள், இப்போதும் தொடர்ந்தால், அதை வைபவம் என்றே குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு காரணம், ஒரு காலத்தில், பொங்கல் பண்டிகையின் போது தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு அரங்கேறிய கும்மியாட்டம், இன்று, அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்து வருகிறது. கும்மியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மாடு பிடித்தல், தப்பாட்டம் என்று தமிழகத்துக்கே உரிய பல கலைகள், இன்றைய தினம் பாட்டி சொன்னால் மட்டுமே தெரியும் என்ற நிலைக்கே ஆளாகி விட்டது. "இன்று... நேற்றல்ல... ஆயிரக்கணக்கான வருஷமாய் தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக கும்மியடித்தல் இருக்குதுங்க... அது, வெறும் ஆட்டம் மட்டுமில்லீங்.... குமிஞ்சு, நிமுந்து, கைகளை தட்டினாக்கா ரத்த ஓட்டம், அல்லாப்பக்கம் நல்லா ஓடுமுங்க... அப்புறம் பொம்ளைங்க எப்பவும் சுறுசுறுப்பாக இருப்பாங்க... இப்ப பாருங்க.... அல்லாப்புள்ளையும் காலேஜ் போறதால, எதுவும் கும்மியடிக்க மாட்டேங்துங்க... அட... நம்ம ஆட்டம்டி... கண்டிப்பாக கும்மியடிக்கோணும் என்று சொல்லி பழக்கி வருகிறோம். எங்களுக்கு பொறகு கண்டிப்பாக அதுங்க கும்மியடிக்கும், என்று அவிநாசி - ராயம்பாளையத்து பெண்கள் கூறியது உண்மை என்பதைபோல், இளம்பெண்கள், கும்மியடிக்க வருவதற்கு கூச்சப்பட்டதை காண நேர்ந்தது.
ஊர் முழுவதுமுள்ள குடும்பங்கள், தனித்தனியே முறுக்கு, அதிரசம், மிக்சர், இனிப்பு வகைகள் தயாரித்து, கோவில் வளாகத்தில் வைத்து, குழந்தைகளை அமர வைத்து கும்மியடித்து, பூப்பறித்து, சரமாக கட்டி, தலையில் வைத்து அழகு பார்த்து, கூட்டாக சேர்ந்து உணவு பண்டங்களை மாற்றி சாப்பிட, அனைத்தையும் மறந்து, பொங்கல் திருவிழா என்ற ஒற்றைக்குடையின் கீழ் ஒற்றுமை என்ற சமத்துவம் மலர்வதை கண் கூடாக காண முடிந்தது. ஆண்டுக்கு ஒரு முறை என்றாலும், கூட்டமாக கும்மியடித்து, ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து, ஓடிப்பிடித்து விளையாடி மகிழும் பொங்கல் பண்டிகையை யாராலும், அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இளம்பெண்கள் திருமணமாகிச் சென்றாலும் கூட, பொங்கல் பண்டிகைக்கு பிறந்த வீட்டுக்கு வந்து பொங்கலன்று கும்மியடிப்பது வாழையடி வாழையாக, அவிநாசி வட்டாரத்தில் இன்றும் தொடர்கிறது. இதன் மூலம் கும்மியடித்தல் கலாசாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு வாழும் என்பது உறுதியாகிறது. மாலை 3.00க்கு துவங்கும் கும்மியடித்தல், பூப்பறித்தல், விளையாடல் ஆகியன மாலை 6.30 மணிக்கு மேல் நிறைவடைந்தது. அந்தி மாலையில் ஆரஞ்ச் நிற வட்டமாக சூரியன் மறையக் காத்திருக்க... அந்த இனிய நாளை நிறைவு செய்ய, "ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ.... பாடல் ஒலி பெருக்கியில் மீண்டும் ஒலிக்கிறது. காற்றில் தவழ்ந்த அப்பாடல், ராயம்பாளையம் கிராமம் முழுக்க கேட்கிறது. வானம் கறுப்பு நிற போர்வையை மெதுவாக விரிக்கத்துவங்க.... இளவட்டங்களும், பெரிசுகளும் வீட்டை நோக்கி நடை போட்டனர். "ஏய்... வீட்டுக்கு போனதும், கும்மியடிச்சதை மறக்காம பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்லயும் "அப்லோடு பண்ணனும்டி, என இரு கல்லூரி மாணவியர் பேசிக்கொண்டே நடக்க, ஒலிபெருக்கியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது... ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ!