பதிவு செய்த நாள்
24
ஜன
2015
11:01
உடுமலை: "ஆல்கொண்டமால் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரிக்க, கோசாலை ஏற்படுத்த வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலன்று ஈன்றெடுக்கப்படும் கன்றுகள், இக்கோவிலுக்கு சொந்தம் என்ற நம்பிக்கை, அப்பகுதியினர் இடையே உள்ளது. ஆண்டுதோறும் பொங்கலையொட்டி நடைபெறும் இத்திருவிழாவில், கன்றுகள் தானமாக தரப்படுகின்றன. கால்நடை வளம் பெருக வேண்டி, ஆடு, சேவல் உள்ளிட்டவற்றையும், பக்தர்கள் காணிக்கையாக வழங்குகின்றனர். கோவிலுக்கு வழங்கப்படும் கால் நடைகளை, பிற மாவட்டங்களில் உள்ள கோசாலைக்கு, இந்து சமய அறநிலையத்துறையினர் அனுப்புகின்றனர். இச்செலவுக்காக, தானம் வழங்கும் பக்தர்களிடம், 1,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தும் முறையால் அதிருப்தியடையும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை, உண்டியலில் செலுத்துகின்றனர். இருப்பினும், ஆண்டுதோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட கால்நடைகள், தானமாக வழங்கப்படுகின்றன. கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் கன்றுகளை, அங்கேயே பரா மரிக்க வேண்டும். இதற்கு கோவில் அருகில் கோசாலை துவக்க வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பு. பக்தர்கள் கூறுகையில், "தானமாக வழங்கப்படும் கால்நடைகளை பராமரிக்க தேவையான தீவனப்புல், தண்ணீர் போன்றவற்றை, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து எளிதாக பெற முடியும். கோசாலை அமைப்பது, இத்தலத்தின் சிறப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும், என்றனர்.