நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எந்த கோயில்களில் சென்றாலும் நாகருக்காக சன்னிதி இருக்கும். அல்லது கோயிலில் உள்ள மரங்களின் அடியிலாவது நாகர் சிலைகள் இருக்கும். ஆனால் நாகரை மூலவராக கொண்டு அமைந்துள்ளதுதான் நாகர்கோவில் நாகராஜா கோயில். இங்கு மூலஸ்தானம் இன்னும் ஓலைகூரையில் தான் உள்ளது. இங்குள்ள புற்றிலிருந்து கிடைக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் பெண்களுக்கு திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் கைகூடும் என்பது நம்பிக்கை. இங்கு அனந்தகிருஷ்ணனுக்கும் கோயில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இந்த கோயிலில் தை பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பூஜிக்கப்பட்ட கொடியை கோயில் பூஜாரிகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கொடிமரத்தில் ஏற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. எல்லா நாட்களிலும் காலையிலும், மாலையிலும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப்.3ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையாகும்.