பதிவு செய்த நாள்
27
ஜன
2015
11:01
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், கண்ணப்பன் தெருவில் சப்த ரிஷிகள் பூஜித்த காசிபேஸ்வரர் சிவலிங்கம், நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காசிபேஸ்வரர் கோவில் இருந்தது. காலப்போக்கில் கோவில் இடிந்து, திறந்த வெளியில் சிவலிங்கம் மட்டும் இருந்தது. இந்த சிவலிங்கத்தை, சப்தரிஷிகளில் ஒருவரான காசியப முனிவர் பூஜித்து வழிபட்டதால், காசிபேஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவன் அழைக்கப்பட்டார். காஞ்சி மகா பெரியவர், இந்த லிங்கத்திற்கு கூரை அமைத்து வழிபட்டார். கோவில் இல்லாமல், கடந்த 40 ஆண்டு காலமாக இருந்தது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு ஆதார பீடம் அமைத்து, பிரதிஷ்டை செய்து மூலவருக்கு சன்னிதி கட்ட, சில பக்தர்கள் முன்வந்தனர். இதற்காக, நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை, 6:00 மணியளவில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாலை, 4:30 மணியளவில், வேதபாராயணம் நடந்தது. மாலை, 6:00 மணியளவில், 108 சுமங்கலிக்கு வஸ்திரம் தானமும்; இரவு, 8:00 மணிக்கு, சப்தகிரி பூஜையும் நடந்தது. ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் மூலவர் சன்னிதி கட்டப்பட இருக்கிறது. இந்த பணி நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.